Friday, February 11, 2011

அதிமுக -தேமுதிக பேச்சுவார்த்தை : 41 சீட்டில் நிற்கும் கடைசி கட்ட பேரம்



சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட்டணி முடிவாகாததால் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

அதிமுக இன்னும் கூட்டணி கட்சிகள் குறித்து அறிவிக்காமல் உள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை முடியவில்லை என்பதால்தான் இந்த தாமதம் என்று பேசப்படுகிறது.

அதிமுக முக்கிய தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தொகுதி உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே வந்தது. அதிமுக 35 தொகுதிகளை ஒதுக்கியதாகவும், தேமுதிக அதற்கு சம்மதிக்காமல் அதிக தொகுதிகள் கேட்டு வந்ததாகவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் பிரேமலதாவுடன் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் 41 தொகுதிக்கு பிரேமலதா ஒத்துக்கொண்டதாக தேமுதிக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.

தொகுதியில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் விரைவில் கூட்டணி குறித்து விஜயகாந்த், ஜெயலலிதா இருவரும் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.