“தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏராளமாக புதுபுது தொழிற்சாலைகள்
வந்ததால்தான் மின்தட்டுப்பாடு” ஏற்பட்டது என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றை
வெளியிட்டிருக்கிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. முதல்வர் ஜெயலலிதா
சட்டசபையில் படித்த அறிக்கையில், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் (2001 –
2006) மின் தட்டுப்பாடே இருக்கவில்லை என்று தெரிவித்ததற்கு பதில்தான், இது.
அவர் என்ன சொல்ல வருவது இதுதான்: “கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்
தொழில் துறை வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. அதனால், கிடைத்த மின்சாரம்
போதுமானதாக இருந்தது. மின் தட்டுப்பாடு கிடையாது. அதன்பின் வந்த தி.மு.க.
ஆட்சியில் அதிக தொழிற்சாலைகள் திறக்க அனுமதி கொடுத்து தொழில் துறையை
ஊக்கப்படுத்தினோம். அந்த தொழிற்சாலைகள் எல்லாம் மின்சாரம் உபயோகித்ததில்,
மின் தட்டுப்பாடு வந்துவிட்டது.”
யாரை சமாளிக்க இப்படியொரு பதிலை கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால், இந்தக் கூற்று சில கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பி விடுமே!
தி.மு.க. ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்ததாக
கூறியிருக்கிறார், அந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை என்ற
ஜெனரல் நாலேஜ்கூட இல்லாமல் அனுமதி கொடுத்தார்களா?
புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும்போது, போதிய இடவசதி உள்ளதா,
கழிவு நீர் வெளியேற வசதி உள்ளதா? அதற்கு வரும் வாகனங்களால் போக்குவரத்து
பாதிக்கப்படுமா என்றெல்லாம் பல ரிஸ்க்-பாக்டர்களை பார்த்த பின்னரே அனுமதி
கொடுக்கப்படும். இந்தளவுக்கு சிறிய விஷயங்களை எல்லாம் பார்க்கும் அரசு,
குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு போதிய மின் சப்ளை இருக்கிறதா என்று பார்க்காமல்
அனுமதி கொடுத்தது என்கிறாரா?
அதுவும் ஒரு தொழிற்சாலை இரண்டு தொழிற்சாலை அல்ல.. ஒரு மாநிலத்துக்கே
பவர்-கட் வரும் அளவுக்கு ஏராளமான தொழிற்சாலைகளை அமைக்க லைசென்ஸ்களை பாரி
போல வாரிக்கொடுத்த வள்ளலா கலைஞர்?
தி.மு.க. ஆட்சியில் தலைநகரில் பெரிய அளவில் தொழிற்சாலை அமைக்கப்பட
வேண்டும் என்றால், சி.ஐ.டி. காலனி பக்கமாக ‘கவனிக்க’ வேண்டிய அவசியம்
இருந்ததை, தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் அமைத்த பலரிடம் கேட்டால் கதை
கதையாக சொல்வார்கள். தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ்கள் பெரும்பாலும் சி.ஐ.டி.
காலனியில் இருந்தே ஓகே செய்யப்பட்டன.
ஓகே செய்யப்படும் தொழிற்சாலைகள் இயங்க மின்சாரமும் தேவை என்பதை அந்த சம்சாரத்திடம் யாரும் சொல்லவே இல்லையா?
அல்லது,
மின்சாரமே தேவையில்லாமல், கையால் கயிறு திரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி வாங்கிவிட்டு, கார் தயாரிக்க துவங்கி விட்டார்களா?
